தஞ்சை கீழ் வெண்மணி விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தையும், அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 44 விவசாய தொழிலாளர்களை ஈவிரக்கமற்று குடிசையில் வைத்து படுகொலை செய்ததையும் ‘நெல்லு’ திரைப்படமாக தயாரித்த தயாரிப்பாளர் கார்த்திக்ஜெய் மீண்டும் அதே பின்புலத்தில் மற்றுமொரு படத்தை தயாரித்துள்ளார். அப்படம் ‘வெண்மணி’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு கதை, வசனம், எழுதி இயக்கியிருப்பவர் கதாக.திருமாவளவன். அவரிடம் வெண்மணி படத்தைப் பற்றி பேசியபோது “கீழ் வெண்மணி சம்பவம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை. நில உச்ச வரம்புச் சட்டம் தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்ட காலம் அது. அதற்கு முன்பு ஜமீன்தார்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கீழ் வெண்மணி போராட்டம் ஒரு சாதியப்போராட்டம் அல்ல. முழுக்க முழுக்க தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடந்த ஒரு வர்க்க போராட்டம். அப்படியான ஒரு படுகொலையை இது வரை யாரும் பதிவு செய்யவில்லை. நாம் பதிவு செய்யலாம் என்று தான் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். நெல்லு படத்தில் இந்த போராட்டத்தின் முதல் ஒரு பகுதி தான் சொல்லப்பட்டிருக்கும். வெண்மணி படத்தில் அதற்கு பின்னால் நடந்த சம்பவங்கள், இப்படுகொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ணநாயுடு கொலை போன்றவைகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கதை நிகழ்காலத்தில் தொடங்கி ப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது. இப்படத்திற்காக தஞ்சாவூருக்கு சென்று பல நாட்கள் தங்கி களப்பணி செய்து பல ஆவணங்களையும், செய்திகளையும் சேகரித்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார். இப்படத்தில் கார்த்திக்ஜெய், கதாக.திருமாவளவன், ஷாலு, பப்லு போன்றோர் நடிக்க கௌபாசுவின் ஒளிப்பதிவில் எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருக்கிறார். |


